Wednesday, January 28, 2009

நீ...


இரவின் தனிமையில்
உடைக்கப்படாத மௌனங்களில்
எழுதப்படாத என் கவிதைகளில்

நீ


நூறு கோடி வார்த்தைகள்
நீ இல்லாததால்
மௌனங்களாய் கரைகின்றது


Saturday, January 24, 2009

நினைவுகள்

கடந்து வந்த நிஜங்கள் எல்லாம் நினைவுகளாய் மாறும் நேரம் நிஜத்தில் தொடர்ந்த நபர்களும் இடங்களும் மறைந்து போக வாய்ப்பு உண்டு. அப்படி பட்ட நாட்களில் அந்த சுகமான சந்தோஷமான நினைவுகள் கூட மனதை சிறிது உரசி பார்ப்பது உண்டு.

வெள்ளை தேசத்தில் நான்கு சுவர்களுக்கு நடுவில் உறக்கம் கலைந்த ஒரு இரவில் மனம் போன போக்கில் எழுத பட்ட சில வரிகள் தான் இவை. கிறுக்கல்கள் என்றே சொல்லலாம்.... ஏனோ எனக்கு பிடித்து போனது... மனதின் ஓரத்தில் உறங்காமல் உரசிடும் சில நினைவுகளும் தனிமையும்... அவை தரும் பல அர்த்தமற்ற புன்னகைகளும் சில சோகங்களும்....

.....

என் அறைகளின் சுவர்களில் மோதி மோதி எதிரொலிக்கிறது
என் மௌனங்கள் மிக சத்தமாய்

என்னை சுற்றிலும் என் தனிமை
என்னுடன் மௌன மொழி பேசி கொண்டு...

கடந்த கால இனிமையான நிஜங்கள் எல்லாம்
நிழல்களாய் நினைவுகளாய் இங்கு விரிந்து நிற்கின்றன

நீ தேவதை தான் சந்தேகம் இன்றி
ஆனால் தேவதை நிழல் மட்டும் நிறம் மாறிடுமோ

உன் நினைவுகள் இன்று மாமிச பட்சியாய் மாறி
என் தனிமை தின்று சிரிக்கிறது

என் தனிமையில் எவர்க்கும் அனுமதி இல்லை தான்
அனுமதி கேட்டா நுழைந்தன உன் நினைவுகள்....

.....

நன்றி நிலாவன், காயத்ரி, தேவா உங்களது முந்தைய கருத்துகளுக்கு....

Tuesday, January 20, 2009

உன்னை பிடித்து விடுவதற்கு....

தனிமையின் இருள் சூழ்ந்த இரவுகளில்
மௌன மொழி மட்டுமே சப்தித்த வேளையில்
எங்கோ விழி நிறுத்தி சுயம் இழந்திருக்க

ஓர் குறுந்தகவலில் தனிமை கிழித்து
'என்ன செய்கிறாய்' என கேட்டாயா

உன்னை பிடித்து விடுவதற்கு....

Monday, January 19, 2009

...

தொட்டில் கண்டதில்லை
தொட்டியில் கண்டெடுக்கபட்டோம்

பிறந்தது முதல் கண்ணீர் மட்டுமே சொந்தமாய் கொண்டோம்

மறந்து விட நினைகிறேன்
என்ன செய்வது
பள்ளி முதல் சுடுகாடு வரை உங்கள் பெயர் கேட்கிறானே

உங்கள் ஒரு நாள் நாடகத்தால்
இங்கு வாழ் நாள் முழுவதும்
முகவரி இழந்தேன்

சிந்தனை சிறகுகள்
விரிய நினைக்கையில்
அனாதை என்ற ஒற்றை சொல்லால்
சிறகொடிக்க படுகின்றோம்

ஊர் அறிய கதறினேன்
இறைவனின் குழந்தை என
உலகம் நாத்திகமாய் மாறியது அறியாமல்

இறைவனின் படைப்பு புத்தகத்தில்
முன்னுரை இல்லாமல் எழுதப்பட்ட
இலக்கியங்கள் நாங்கள்

ஏனோ
முன்னுரை இல்லாத ஓர் குறையால்
முடிவுரை இன்றி தவிக்கிறோம்

இனி ஒரு விதி செய்வோம்
முதல் எழுத்து இல்லா சமுதாயம் படைதிடுவோம்

- இரா.மோகன்

லேசர் பார்வை

பெண்

முதல் முதலாய்...